Skip to main content

விருட்சத்தில் பிரசுரமான மொழிபெயர்ப்பு கவிதைகள்

அழகியசிங்கர்  


சுக்வீர் கவிதைகள்



2. வண்ணங்கள்



வண்ணங்கள் சாவதில்லை
அவை கரைந்து விடுகின்றன
அல்லது அடித்துக் கொண்டு போகப்படுகின்றன
அல்லது பூமியின் அந்தகாரத்தில்
விதைக்கப்படுகின்றன.
வண்ணங்கள் மலர்களாக மாறுகின்றன,
மேகங்களின் ஒளிர்ந்து
உதடுகளில் புன்னகை பூக்கின்றன,
கண்ணீரைப் பெருக்கி
ஒளியை ஈன்றெடுக்கின்றன.

வண்ணங்களாகிய நாம்;
வண்ணங்கள் உருவாக்கும் நாம்
வாழ்க்கையை
நம் முதுகுகளில் சுமந்து கொண்டோ
நம் பின்னால் இழுத்துக் கொண்டோ
நம் சிறகுகளில் அலைத்துக்கொண்டோ
இங்கு வந்து சேர
நூற்றாண்டுகளைத் தாண்டியிருக்கிறோம்,

இருள் முதல் ஒளிவரை உள்ள
எல்லா வண்ணங்களுமான நாம்
பல தடவைகளில்
அடித்துக்கொண்டுபோகப்பட்டு
மறுபடியும் பிறந்திருக்கிறோம்.
இன்றும்
காலத்திரையை வண்ணங்கொண்டு தீட்டுகிறோம்

அனாதிகாலத்தொட்டுப் பிறந்து வரும் நாம்
வாழ்க்கையின் அமுதைக் குடித்ததால்
இன்றும்
நஞ்சுடன் கலந்த வாழ்க்கையமுதைச்
சுவைக்கிறோம்
கனவுகளை உருவாக்குகிறோம்

மூலம் : பஞ்சாபி தமிழில் : மேலூர்

சுக்வீர் (1925) நாவல்,  சிறுகதை, கவிதை இத்துறைகளில் பஞ்சாபி மொழியில் சிறந்து விளங்குகிறார். நான்கு கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன.   நாற்பத்தைந்து நூல் களுக்கு மேலாக பஞ்சாபியில் மொழி பெயர்த்திருக்கிறார். அவரது கவிதைகளும் கதைகளும் ஆங்கிலத்திலும் வேறுபல இந்திய, அயல்நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.


(நவீன விருட்சம் ஜøலை - செப்டம்பர் 1989)
'

Comments