Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 32



அழகியசிங்கர்  


கண்ணன் - என் காதலன்   

சி சுப்பிரமணிய பாரதி 


ஆசை முகமறந்து போச்சே - இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகமறக்க லாமோ?

கண்ணில் தெரியுதொரு தேற்றம் - அதில்
கண்ண னழகுமுழு தில்லை
நண்ணு முகவடிவு காணில் - அந்த
நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்.

ஓய்வு மொழிதலுமில் லாமல் - அவன்
உறவை நினைத்திருக்க முள்ளம்
வாயு முரைப்பதுண்டு கண்டாய் - அந்த
மாயன் புகழினையெப் போதும்

கண்கள் புரிந்துவிட்ட பாலம் - உயிர்க்
கண்ண னுருமறக்க லாச்சு.
பெண்க ளினத்தி லிதுபோலே - ஒரு
பேதையை முன்புகண்ட துண்டோ?

தேனை மறந்திருக்க வண்டும் - ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
வைய முழுதுமில்லை தோழி.

கண்ணன் முகமறந்து போனால் - இந்தக்
கண்க ளிருந்துபய னுண்டோ?
வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி
வாழும் வழியென்னடி தோழி?


நன்றி : பாரதி பாடல்கள் - ஆய்வுப் பதிப்பு - தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர் - விலை ரூ.80 - தமிழ்நாட்டரசின் பாரதி நூற்றாண்டு விழாத் திட்ட உதவியில் வெளியாகும் புதிய பதிப்பு - இரண்டாம் பதிப்பு : 1989 

          

Comments