Skip to main content

பார்வையாளராக இருத்தல்

ஸ்ரீநிஸகர்கதத்தா மஹாராஜ்

 பார்வையாளராக இருத்தல்

                                                                                                            தமிழில்  : அழகியசிங்கர்

கேள்விகேட்பவர் :  நான் முழுக்க ஆசைகளுடன் இருப்பவன்.  எப்படி நான் விரும்புவதைப் பெற முடியும்?

மஹாராஜ் : நீங்கள் விரும்புவதைப்பெற தகுதியுடையவரா?  ஏதோ வகையில் நீங்கள் விரும்புவதைப்பெற நீங்கள் உழைக்க வேண்டும்.  உங்களுடைய சக்தியைச் செலவிடவேண்டும்.  பின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

கே.கே : எங்கிருந்து அந்தச் சக்தியைப் பெறுவது?

மஹா : நம்முடைய ஆசையே நம் சக்தி.

கே.கே :  அப்படியென்றால் ஏன் எல்லா ஆசைகளும் நிறைவேறுவதில்லை.

மஹா : அது நிறைவேறும்படியாக கடைசிவரை வரும்படி வலிமை மிக்கதாக இருக்காது..

கே.கே :  ஆமாம்.  அதுதான் என்னுடைய பிரச்சினை.  சிலவற்றை விரும்புகிறேன்.  அதை நிறைவேற்றப் போகும்போது சோம்பேறியாக இருக்கிறேன்.

மஹா : உங்களுடைய ஆசை தெளிவாகவும் வலிமையாகவும் இல்லாவிட்டால், அது எந்த உருவத்திற்கும் வராது.  கூடவே, உன் ஆசை உன்னுடையதாக இருக்கும் பட்சத்தில் அதாவது உன் சந்தோஷத்திற்காகவென்றால் அது குறுகியது.  உன்னை மீறி வெளிப்படாது.

கே.கே :  இன்னும் மிகச் சாதாரண மனிதர்கள் என்ன விரும்புகிறார்களோ அதை அடைந்து விடுகிறார்கள்.

மஹா : ரொம்ப காலத்திற்குப் பெரிதாக என்ன நினைத்தாலும், அவர்களுடைய சாதனைகள் குறுகியவை.

கே.கே :  சுயநலமில்லாத ஆசைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
மஹா : நீங்கள் ஒரு பொதுவான தன்மைக்காக ஆசைப்பட்டால், இந்த உலகம் முழுவதும் உங்களுடன் சேர்ந்து ஆசைப்படும்.  மக்களுடைய ஆசையை உங்கள் ஆசையாக எடுத்துக்கொள்ளுங்கள்.  அதற்காக முயற்சி செய்யுங்கள்.  அது நிச்சயம் தோல்வி அடையாது.

கே.கே : மக்களுக்காக என்பது கடவுளுடைய செயல்.  என்னுடையது அல்ல.  நான் என்னைப்பற்றிதான் நினைத்துக்கொள்கிறேன்.  என்னுடைய தேவையான ஆசைகள் நிறைவேற நான் பார்ப்பதில் தவறில்லை அல்லவா?  என்னுடைய ஆசைகள் நியாயமானவை.  அவை சரியான ஆசைகள்.  ஆனால் அவை ஏன் உண்மை ஆவதில்லை.

மஹா : சூழ்நிலைகளைப் பொறுத்தே ஆசைகள் நியாயமானதா இல்லையா என்பது தெரியும்.  அது எப்படி நீங்கள் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அமையும்.  அது ஒவ்வொருத்தரைப் பொறுத்த விஷயம் எது நல்லது கெட்டது என்பதை அறிய.

கே.கே : என்ன மாதிரியான அளவுகோல் உள்ளது நல்லது கெட்டது என்ற வித்தியாசத்தை அறிய.   எப்படி நான் அறிந்துகொள்வது எது மாதிரியான ஆசை நல்லது அல்லது கெட்டது என்பது.

மஹா : உங்களைப் பொறுத்தவரை துக்கத்தைத் தருகிற ஆசைகள் எல்லாம் தவறானவை.   அதேபோல் சந்தோஷத்தைத் தருகிற ஆசைகள் எல்லாம் சரியானவை.  ஆனால் நீங்கள் மற்றவர்களை மறக்கக் கூடாது.  அவர்களுடைய துக்கமும், சந்தோஷத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கே.கே :  முடிவுகள் எதிர்காலத்தில் உள்ளன.  எப்படி எனக்குத் தெரியும் அவர்கள் எப்படி இருப்பார்களென்று.

மஹா : உங்கள் மனதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஞாபகப் படுத்திக்கொள்ளுங்கள்.  நீங்கள் மற்றவர்களைவிட வித்தியாசனமானவர் இல்லை.  அவர்களுடைய பெரும்பாலான அனுபவங்கள் உங்களுக்கும் பொருந்தும்.  எப்போது தெளிவாகவும் ஆழமாகவும் யோசனை செய்யுங்கள்.  தீவிரமாக உங்களுடைய முழுமையான ஆசைகளை நோக்கிச் செல்லுங்கள்.  அவற்றின் மாற்றங்களையும் புரிந்துகொள்ளுங்கள்.  அவை சிந்தனாபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் உங்களை உருமாற்றுகிறது.  உங்களுடைய செய்பாடுகளையும் அவை மாற்றுகிறது.  ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் உங்களுக்குத் தெரியாததை நீங்கள் ஒதுக்கித் தள்ள முடியாது.  உங்களைத் தாண்டி போகவேண்டுமென்றால், உங்களைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

கே.கே : இது என்ன அர்த்தத்தைத் தருகிறது?  நான் என்னை அறிந்துகொள்வதன் மூலம் நான் என்ன தெரிந்துகொண்டு விட முடியும்?

மஹா : நீங்கள் எதுவுமில்லை என்பதை

கே.கே : நான் எதுவுமில்லையா?

மஹா : நீங்கள் என்னவாக உள்ளீர்களோ அவ்வாறு ஏற்கனவே உள்ளீர்கள்.  நீங்கள் எதுவுமில்லை என்பதை அறியும்போது, நீங்கள் அதிலிருந்து விடுதலை அடைந்து விடுகிறீர்கள்.  உங்களுடைய உண்மையான தன்மையுடன் இருந்து விடுகிறீர்கள்.  இவையெல்லாம் தானகவே எந்த முயற்சியில்லாமல் நடக்கும்.

கே.கே :  நான் என்ன ஆராய்வது?

மஹா : நீங்கள் ஆராயவேண்டியது ஒன்றுமில்லை என்பதைத்தான்.  நீங்கள் நீங்களாக உள்ளீர்கள்.  அவ்வளவுதான்.

கே.கே : ஆனால் இறுதியாக நான் என்னவாக உள்ளேன்?

மஹா : நீங்கள் எதாக இல்லை என்பதை கடைசிவரை உதறுவதுதான்.

கே.கே :  எனக்குப் புரியவில்லை

மஹா : நீங்கள் இதுவாகவோ அதுவாகவோ இருப்பதாக   தீர்மானிக்கப்பட்ட கருத்தாக உங்களிடம் உள்ளது.   அதுதான் உங்களைக் கட்டுப்படுத்துகிறது.

கே.கே : நான் எப்படி இந்தக் கருத்திலிருந்து விடுபடுவது?

மஹா : நீங்கள் என்னை நம்புவதாக இருந்தால், நான் சொல்வதைக் கேளுங்கள்.   தெளிவான விழிப்புணர்வு நிலையில் நீங்கள் உள்ளீர்கள். முடிவில்லாதத் தெய்வீகத்தன்மையை அது வெளிப்படுத்தும்.  இதை உணருங்கள்.  அதன்படி வாழுங்கள்.  என்னை நீங்கள் நம்பவில்லை என்றால், உங்களுக்குள் பயணம் செய்யுங்கள்.  'நான் யார்?' என்பதை விஜாரித்துக்கொண்டிருங்கள்.  அல்லது உங்கள் மனதிற்குள், 'நான்தான்' என்பதில் குவியுங்கள்.  எளிமையான தெளிவான ஒன்றாக அது இருக்கும்.

கே.கே : உங்கள் மீதான எந்தவிதமான நம்பிக்கையைப் பொறுத்தது அது.

மஹா : உங்கள் உள்ளூணர்வின் மூலம் மற்றவர்களின் மனங்களைப் புரிந்து கொள்வது பொறுத்து.  என்னை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால், உங்களையே நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

கே.கே :  என்னால் எதையும் செய்ய முடியவில்லை

மஹா : ஒழுக்கமுள்ள பயனுள்ள வாழ்வின் மூலம் உங்களைப் புனிதப்படுத்திக் கொள்ளுங்கள்.  உங்களுடைய எண்ணங்களை, உணர்வுகளை, வார்த்தைகளை, செயல்பாடுகளை கவனியுங்கள்.  இது உங்களைத் தெளிவுபடுத்தும்.

கே.கே :  நான் எல்லாவற்றையும் துறந்துவிட வேண்டுமா?  வீடு இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டுமா?

மஹா : நீங்கள் எதையும் துறக்க வேண்டாம்.  நீங்கள் வீட்டைவிட்டு வருவதன் மூலம் உங்கள் வீட்டிலுள்ளவர்களுக்குத் தொந்தரவு தருகிறீர்கள்.  நம்முடைய பந்தங்கள் நம் மனதில் உள்ளன.  அவை நம்மை விட்டுப் போகாது.  நாம் நம்மை அறியும்வரை.  முதலில் உங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.  எல்லாம் தானாகவே வரும்.

கே.கே :  நீங்கள் என்னிடம் முன்பே கூறியுள்ளீர்கள்.  üநான்தான் ஒப்புயர்வற்ற உண்மைý என்று.  இது சுய கருத்தில்லையா?

மஹா : நிச்சயமாக நீங்கள்தான் ஒப்புயர்வற்ற உண்மை.  ஆனால் எதிலிருந்து.  ஒவ்வொரு மணல்துகளும் கடவுள்தான்.  இதை அறிவது முக்கியம்.  ஆனால் அது ஒரு ஆரம்பம்தான்.

கே.கே : நல்லது.  நீங்கள் சொல்கிறீர்கள்.  நான்தான் ஒப்புயர்வற்ற உண்மை என்பதை.  நான் நம்புகிறேன்.  அடுத்தது நான் என்ன செய்ய வேண்டும்.

மஹா : நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.  நீங்கள் எதில் இல்லை என்பதை ஆராய்ந்து கண்டுபிடியுங்களென்று.  உடல், உணர்வுகள், எண்ணங்கள், கருத்துக்கள், காலம், வெளி, இருத்தல், இல்லாமல் இருத்தல், இது அல்லது அது - எதுவும் தீர்மானமாக இல்லாமலும், தெளிவில்லாமலும் உங்களை நோக்கிக் குறிக்கப்படுகிறது.  வெறுமனே சொற்களால் ஆன பிரகடனம் எந்தப் பலனையும் அளிக்காது.  நீங்கள் எதாவது ஒரு சூத்திரத்தை முடிவில்லாம் சொல்லிக்கொண்டிருக்கலாம்.  அதனால் எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை.  நீங்கள் உங்களைத் தொடர்ந்து  கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும் - குறிப்பாக உங்கள் மனதை  
- ஒவ்வொரு கணமும் எதையும் விட்டுவிடாமல்.   'தான்' என்பதிலிருந்தும், 'தான் இல்லை' என்பதிலிருந்தும் அறிய பார்வையாளனாக இருப்பது முக்கியம்.

கே.கே :  பார்வையாளனாக இருப்பது என்னுடைய உண்மைத் தன்மை இல்லை.

மஹா : பார்வையாளனாக இருப்பதற்கு எதாவது பார்ப்பதற்கு இருக்க வேண்டும்.  நாம் இன்னும் இரட்டைத்தன்மையுடன் இருக்கிறோம்.

கே.கே :  பார்வையாளன் பார்ப்பது என்னவாக உள்ளது?

மஹா : வார்த்தைகளைக் கோர்ப்பது உங்களை எங்கும் இட்டுச்செல்லாது.  உங்களுக்குள் செல்லுங்கள்.  பிறகு கண்டுபிடியுங்கள் நீங்கள் என்னவாக இல்லை என்பதை.  மற்றதெல்லாம் ஒன்றுமில்லை.  

(PUBLISHED IN NAVINA VIRUTCHAM 68-69TH ISSUE)

Comments