Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 4

அழகியசிங்கர் 

 4)    பூவொன்று

லாவண்யா சுந்தரராஜன் 


மழைத்துளியென
மஞ்சள் மலர்களை
உதிர்த்துக்கொண்டிருந்தது
அம்மரம்

நிழலுக்கென ஒதுங்கிய பேருந்து
அதில் சில மலர்களை
முன்கண்ணாடியில் ஏந்திச் சென்றது
கண்ணாடியில் வழுக்கிய பூக்கள்
சாலையில் விழுந்து நசுங்கின

வைப்பர் புறக்கணித்த பூக்கள்
ரோட்டோரம் சிதறின
பெண்டுலமாக ஆடும் வைப்பரில்
சிக்கிய பூக்கள்
நைந்து கிழிந்தன

பின்னும் வைப்பர்
கிட்டிய பூக்களை விடாது
அலைக்கழித்து
கசக்கிக்கொண்டிருக்கிறது

எதுவும் செய்யவியலாது
பூக்கள் சிதைவுறும் காட்சி
மனசுக்குள் குமைய
நிறுத்தம் வந்ததும் இறங்கி நடக்கிறேன்


நன்றி : இரவைப் பருகும் பறவை - கவிதைகள் - லாவண்யா சுந்தரராஜன் - விலை ரூ.70 - பக் : 80 - காலச்சுவடு பதிப்பகம், 669 கே பி சாலை, நாகர்கோவில் - போன் : 04652 - 278525


Comments