Skip to main content

ஏழு வரி கதைகளின் தொகுதி

அழகியசிங்கர் 





ஏழு வரிகளில் கதை என்றால் ஏழு வரிகளில்தான் முடிய வேண்டுமென்பதில்லை, எட்டு வரிகள், ஒன்பது வரிகள், பத்து வரிகள் என்றெல்லாம் கூட எழுதலாம்.  தயவுசெய்து எழுதுபவர்கள் என் இ மெயிலில் அனுப்பவும்.  நான் பார்த்து விட்டு அடுத்த நாளே பதிவு செய்கிறேன்.  ஒருவரே எத்தனை கதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். என் நோக்கம் 100 பக்கங்களில் இது மாதிரியான கதைகளை அச்சடித்துக் கொண்டு வரலாமா என்பதுதான்.  அதனால் தயவுசெய்து  navina.virutcham@gmail.com இ மெயிலில் அனுப்புங்கள்.


1.  வைதீஸ்வரன்   

 இட ஒதுக்கீடு
                      

பிளாட்பாரத்தில்  முக்கால்  மணி நேரமாக  உட்கார்ந்திருந்தோம்.  இரவு பத்து மணிக்கு புறப்படுகிற  ரயில்  அங்சு நிமிஷம் கழித்துத் தான் பிளாட்பாரத்துக்கு வந்து நின்றது.  வெளியே ஒட்டியிருந்த  பெயர் பக்கத்தை சரி பார்த்து கைப்பெட்டியுடன்  உள்ளே தள்ளாடி  முட்டி மோதி நகர்ந்து  என் ஸீட்டை ஒரு வழியாய்க் கண்டு பிடித்து விட்டேன்.  அதில்  ஏற்கனவே ஒரு  மாது  தடிக் கண்ணாடி போட்டுக் கொண்டு  உட்கார்ந்திருந்தாள்... சற்று வயதானவர்.
   “அம்மா....இது  என் ஸீட்டு   9.  ...”
அந்த மாது என்னை   ஏறிட்டுப் பார்த்த வண்ணம்  சற்றும் அசையாமல் உட்கார்ந்திருந்தாள்.
    “ அம்மா....  இதோ பாருங்கள்...என்  டிக்கட்டு......இது  என்  ஸீட்டு.. A9 நீங்கள்  தவறாக  உட்காந்திருக்கிறீர்கள்....”
   “இது  என்  ஸீட்டு  ஸார்..  நீங்கள்  தான்  தப்பாக  சொல்லுகிறீர்கள்.  நான்  பார்த்து  விட்டுத் தான்  உட்கார்ந்திருக்கிறேன்...”  அந்த  அம்மாள் மிக நிச்சயமாக  அழுத்தமாக  சொல்லி விட்டு  சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். மேலும் என்னுடன் பேச விரும்பாதவள்  போல்.
  “இல்லை..மேடம்... இதோ பாருங்கள்  என்  ஸீட்டு நம்பர்  A 9 ..”
 “  நீங்கள்  என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்.  9  என்  ஸீட்டுத் தான்.. கம்பார்ட்மெண்ட் நம்பர்  பி2..........உங்களுடையது  வேறாக  இருக்கலாம். “
  நான்  சொன்னேன் மீண்டும்  டிக்கட்டைப் பார்த்து விட்டு..
 “இல்லை மேடம்...என்  டிக்கட்டு  இதோ... எனக்கும்  கம்பார்ட்மென்ட்  பி2 தான்.. நீங்கள்  தப்பாக  வந்து விட்டீர்கள்.””
“இல்லை  இது  என்  ஸீட்டுத் தான்  ..டி டி ஆரிடம்  போய் சொல்லுங்கள்...”
  “ இல்லை  மேடம்  நீங்கள்  தான்  தவறாக,,,,”
அந்த  மாது  உரத்த குரலில்  பேசினாள்
.. Don’t disturb me…Go away. I cannot    vacate.     This  is  my  Seat…”  ”    அவள்   ஒரு வேளை  ஓய்வு பெற்ற  கல்லூரி பிரின்ஸிபாலாக  இருக்கலாமோ!!
    நகராமல்  வழியை  அடைத்துக் கொண்டு  நான்  அந்த  மாதுவிடம்  வாதாடிக் கொண்டிருந்ததை  மேலும்  பொறுத்துக் கொள்ளா முடியாமல்  உள்ளே வர முடியாத  பயணிகள்  கத்தினார்கள்.
  “மிஸ்டர்  வழியை  விட்டுட்டு  சண்டை போடுங்க....நாங்க  உள்ளே போக  வேண்டாமா? “
   “ஸார்  என் ஸீட்டு  A9     பாருஙக...இவங்களும்  அதே நம்பர்னு  சொல்றாங்க..  பாருங்க.. “   நான்  என்  டிக்கட்டை  அவர்களிடம்  காட்டினேன்
  பயணிகளில் ஒரு  இளைஞன்.  கம்ப்யூடர்  பையனாக  இருப்பான் போலும். 
   “ஸார்... உங்க  டிக்கட்டை  கொடுங்க....”    கொடுத்தேன்....
 ”சரியா  இருக்கு....அம்மா...ஒங்க  டிக்கட்டைக் கொடுங்க...”
 தயக்கத்துடன்  சற்றுக் கோபமாக  அவள்  டிக்கட்டைக் கொடுத்தாள்
  “ அம்மா  ஒங்க  ஸிட்  நம்பர்  கம்பார்மென்ட்  நம்பர்  எல்லாம்  சரியாத் தான்...இருக்கு........”
 அந்த அம்மாள்   கோபத்தோடு  குறுக்கே பேசினாள்
“  Tell  this  bloke   I  have  the  correct   Seating…Bloody  nuisance   ”….”
அந்தப்  பையன்  அவளைக் கையமர்த்தி விட்டு  சொன்னான்..
  Wait  Madam..  நான்  சொlல்றதை  கேட்டுட்டு  பேசுங்க... .நீங்க  உக்காந்த  ஸீட்  சரியானது  கம்பார்ட்மெண்ட்   சரி.தான்.  ஆனா.  ஒக்காந்த  ரயில்  தான்  வேறெ!  இது  25630.   நீங்க  ஏற வேண்டிய  வண்டி  25360.  அதோ  அந்த  நாலாவது  பிளாட்பார்த்திலே  நிக்குது....இந்தாங்க  டிக்கட்...”
  அந்த  அம்மாளின்  முகம்  சிவந்து  பதறியது.  தலையைக் குனிந்த  வாறு  “ What  a  confusion…Oh!  Hell…”  அவள்  எழ முடியாமல்  எழுந்து தடுமாறி  நின்றாள்.
  அவள் பெட்டியையும்  பைகளையும்  அவசரமாக   சிலர் தூக்கி  வெளியே    இறக்கி  வைத்தார்கள்.
    அவளையும்  ஒருவன்  கைத்தாங்கலாக  இறக்கி  விட்டான்.
அவள் நிலைமையப்  பார்க்க  எனக்கு பரிதாபமாக  இருந்தது.  அவளைப் கண்ணாடி வழியாகப் பார்த்து  “SORRY “ என்றேன்  அவள்  என்னைப் பார்க்க விரும்பாமல்  கோபமாகத்   தலையைத் திருப்பிக் கொண்டாள். அவள்  யார் மீது  கோபப் பட வேண்டுமோ!................. 
  நாலாவது  பிளாட்பாரத்தில்  அவள்  ஏற வேண்டிய  ரயில்  ஒரு குலுக்கலுடன்    நகர்ந்து  கொண்டிருந்தது...............


2.  எம் ரிஷான் ஷெரீப் 

குறிப்புகள் 

குறிப்பேதும் எழுதி வைக்காமல் இன்று தூக்குப் போட்டுக்ச் செத்திருந்த பவித்ரம் அக்கா, சஞ்சிகையொன்றுக்குத் தபாலில் அனுப்பிவிடச் சொல்லி என்னிடம் நேற்றுத் தந்திருந்த தபாலுறையைக் கையில் வைத்திருக்கிறேன்.  அக்காவின் கணவரிடம் கொடுத்து விடலாமா?  அவரிடம் தபாலைக் கொடுக்காமல் என்னிடம் ஏன் தர வேண்டும்?  அக்கா இறுதியாக அதில் என்ன எழுதி இருக்கக்கூடும்ட?  பிரித்துப் பார்த்து, எதுவும் விளங்கவில்லையானின், சஞ்சிகைக்கே அனுப்பி விடலாம்.  பிரித்துப் பார்த்தேன்.  அதை சஞ்சிகைக்கே அனுப்பி விடலாம்.  எதற்கு வீண் வம்பு?


3.  பெருந்தேவியின் மூன்று கதைகள்

1. பக்கத்து வீடு

எப்போதும் ஒரே இரைச்சல்.  இரவு முழுக்க பொருட்களை நகர்த்தும் அல்லது உருட்டும் சத்தம்.  பகலிலோ சில நேரங்களில் திடீர் ஓலம்.  சிலசமயம் சிங்கம் வீட்டுக்குள் நுழைந்து விட்டதுபோல் அலறல் இல்லாவிட்டால் கூர்ந்து கேட்க வைக்கும் ஏறியிறங்குகிற ராட்சசக் கிசுகிசுப்பு குரல்.  சொல்லியும் கேட்பதாக இல்லை.  
அபார்ட்மெண்ட் நிர்வாகத்தில் குற்றஞ்சாட்டியாயிற்று இன்று.
உறுதியாக சொல்லிவிட்டார்கள் போலீசுக்குப் போவார்களாம் நான் காலி செய்யாவிட்டால்.

2. உள்ளர்த்தம்

வானதிக்கு எதிலும் பிடிப்பில்லை.  பெற்றோர் அவள் பிறந்தவுடனேயே எப்படியோ இறந்து விட்டார்கள்.  வளர்த்த அத்தை இவள் வளர்ந்தவுடன் எப்படியோ போய்ச் சேர்ந்துவிட்டாள்.  எப்படியோ தேற்றிக்கொண்டு காதலிக்கலாùம்றால் சுற்றுவட்டாரத்தில் ஒருவனுமில்லை.  அட. அழகாகக் கூட வேண்டாம்.  
காலம் வாணலியில் அவளை வறுத்து தன் வாயில் போட்டுக் கொள்கிறது.  இந்த உவமானத்தால் வறுத்த கடலைக்கு என் மனம் அவாவுவது நல்லதொரு வாசகருக்கு எப்படியோ தெரிந்து விடும்.

3. ஒரு ஷøவின் கதை

இங்கே ஒவ்வொரு குளிர் காலத்திலும் பனியில் சறுக்கி விழுதல் என் வாடிக்கை.  மாணவியாக இருந்த ஆறு வருடமும் சாப்பாட்டுக்கே சிங்கி அடிக்க வேண்டியிருந்தது.  அடியில் முட்கள் வைத்த ஷø வாங்க வேண்டுமென்கிற பலநாள் கனவு வேலை கிடைத்த இவ் வாரம்தான் நிறைவேறியது.  எல் எல் பீன் இணையதளத்தில் "டோஸ் டி ஷø" என்று விளம்பரம் செய்திருந்தான். சுளையாக நூத்துப் பத்து டாலர். 

இன்று காலை அணிந்த முதல்மணி நேரத்தில் என் பாதம் சுடச்சுட வெங்பாய பஜ்ஜி.  அலுவலகத்துக்குச் சென்றவுடன் முதல் வேலையாக ஷø வைக் கழட்டிப் பிய்த்துத் தின்றேன்

4.  நேதாஜிதாசன்   2  கதைகள்


1)  தீர்ப்பு சொன்ன குற்றவாளி

நீதிபதி : குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா 

குற்றவாளி: குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா

நீதிபதி : நான் என்ன செய்தேன்?

குற்றவாளி : நான் என்ன செய்தேன் ?

நீதிபதி : நீ கொலை செய்தாய் .இதனால் உனக்கு மரண தண்டனை அளிக்கிறேன்.

குற்றவாளி : நீயும் இப்போது கொலை செய்தாய். இதனால் உனக்கும் மரண தண்டனை அளிக்கிறேன்.

நீதிபதி வெளியே நின்றுகொண்டிருந்த முதலாளியை பார்த்து சிரிக்கிறார்.
ஒரு முதியவர் " மரண தண்டனை கொடுத்த சந்தோஷமா நீதியரசரே, அது எல்லோருக்கும் வரத்தான் போகிறது. " என முனகி கொண்டே நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறுகிறார்.

2)   நீ தான்

எல்லாம் முடிந்தது அவனுக்கு அவனுடைய உயிரை தவிர.அதையும் முடித்துக்கொள்ள வெள்ளை நிற கயிற்றில் கழுத்து அளவு எடுத்து முடிச்சு போட்டிருந்தான்.திடீரென கதவை தட்டும் சத்தம்.அங்கு போய் பார்த்தான் யாரும் இல்லை.மீண்டும் முடிச்சு போட்டுக்கொண்டு நாற்காலியில் ஏறி நின்றான்.மீண்டும் கதவு தட்டும் சத்தம்.இந்த முறை அவனும் இல்லை.உயிர் தொங்கி கொண்டிருந்தது.
கதவை திறக்காமலே வெளியே போக முடிந்தது.எங்கும் இருள்.

அவன்: யார் கதவை தட்டியது ?

கதவை தட்டியவன்: நீ தான்

5. சுந்தர்ராஜன் சுப்பிரமணியன் ஒரு கதை

சந்தி காலத்திலே


‘சந்தி காலத்திலே ஏண்டா இப்படி தூங்கறே? நல்லா சாப்பிட்டுத்தான் தூங்கேன். அம்மா எப்பொழுதும் அடித்துக்கொள்வாள். சாப்பாடு.- சாப்பாடு தான் எப்போதும். சின்ன வயசிலேர்ந்து அவள் அப்படித்தான். தூங்கிற அவனை எழுப்பி பாலு சோறு கொடுத்து தூங்கச் செய்வாள். காலையில் எழுந்து அவன் முதல் நாள் சாப்பிடவே இல்லை என்று சாதிப்பான்.

இன்னிக்கும் அப்படித்தான். சாயங்காலம் ஆறு மணிக்கே அடிச்சுப் போட்டாப் போல தூங்கறான் . – பெத்த அம்மாவுக்கு கொள்ளி வைத்துவிட்டு! ஆவியாய் இருக்கும் . அம்மா துடிக்கிறாள் – ‘பையன் இன்னும் சாப்பிடவே இல்லையே!’ என்று!


6.  உமா மஹேஸ்வரியின் ஒரு கதை


காலச் சக்கரம்



1996_ 8வதுபடித்துக்கொண்டு இருந்த என் பெண் அன்று. சொன்னாள்.அம்மா பேரன்ட்ஸ் டீச்சர் மீட்டிங்கு அப்பாவை அனுப்பு.நீவந்து மானத்தை வாங்காதே.உன் அக்காவா என்கிறாள் டீச்சர்.நானும் கொண்டை போட்டு பெரிய பொட்டு வைத்து புடவைத்தலைப்பைப் போர்த்திய படி 
போனேன்.

2016_நேற்று அவள் சொன்னாள்.அம்மா தம்பியின் காலேஜ் நன்பர்கள் வரும் போது நரைத்த தலையோட வயசான கிழவி மாதிரி யல்லாமல் டை அடித்து சுடிதார் போட்டு ஸ்மார்டா இரு ! சரி பெண்ணே!




ஒரு தவறுக்கு வருந்துகிறேன்....

போன பதிவில் தெரியாமல் மும்பையில் உள்ள என் நண்பர் எ தியாகராஜன் எழுதிய 3 கதைகளை அசோகமித்திரன்தான் அனுப்பி உள்ளார் என்று பதிவு செய்து விட்டேன்.  அக் கதைகளை மும்பை எ தியாகராஜன் என்று வாசிக்கவும்.


Comments