Skip to main content
கருணை கொள்ளுங்கள்; காரணமும் விளைவும் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

-ராமலக்ஷ்மி


கருணை கொள்ளுங்கள்

எப்போதும் மற்றவரின் கருத்துகளைப் 
புரிந்து கொள்ளவே
கேட்டுக் கொள்ளப்படுகிறோம் 
அவை என்னதான்
காலத்துக்குப் பொருந்தாமல்
முட்டாள்தனமானதாய்
வெறுப்பூட்டக் கூடியதாய் இருந்தாலும்.

தங்கள் மொத்தத் தவறுகளையும்
பாழடிக்கப்பட்ட வாழ்க்கையையும்
கருணையோடு நோக்குமாறு
கேட்டுக் கொள்கிறார்கள்,
குறிப்பாக வயதாகி விட்டவர்கள்.

ஆனால் மூப்பென்பது
நமது செயல்களின் மொத்தம்.
அவை மிக மோசமாக  
மூப்படைந்திருக்கின்றன
மங்கலாகவே வாழ்ந்து
சரியாகப் பார்க்க மறுத்து.

அவர்களுடைய தவறு இல்லையா?

யாருடைய தவறு?
என்னுடையதா?

அவர்களுக்குப் பயம் வந்து விடும்
என்கிற பயத்தினால்
என்னுடைய கருத்துகளை
அவர்களிடமிருந்து
ஒளித்து வைக்க
கேட்டுக் கொள்ளப்பட்டேன்

மூப்பு ஒரு குற்றமில்லை

ஆனால் வேண்டுமென்றே
பாழடிக்கப்பட்ட வாழ்க்கை

வேண்டுமென்றே பாழடிக்கப்பட்ட
பல வாழ்வுகளுக்கு
காரணமாய் இருப்பது

வெட்கத்துக்குரிய குற்றம்.
*

காரணமும் விளைவும்

ஆகச் சிறந்தவர்கள்
அநேகமாக அவர்தம் கைகளாலேயே இறந்து போகிறார்கள்
விட்டு வெளியேற விரும்பி,
விடப்பட்ட எஞ்சியவர்களால்
புரிந்து கொள்ளவே முடிவதில்லை
ஏன் எவரும்
தங்களை விட்டுச் செல்ல விரும்புகிறார்கள் என்பதை.
*

மூலம்: 'Be Kind' & 'Cause And Effect'
By Charles Bukowski

 

Comments