Skip to main content

கண் கூசும் வெயில்

செ .சுஜாதா

வர்ணஜாலங்கள் காட்டிய 
நீர்க்குமிழிகள் 
வலுவற்று உடைந்து சிதறுகின்றன 
 
வீடற்ற வெற்று கதவுக்கு
இத்தனை வேலைப்பாடுகள் ஏன்?
 
நம்பிக்கை உடைசல்கள் மண்டிய 
அவ்இடத்தைவிட்டு விலகி நடக்கிறேன் 
 
அழுந்த சாயம்பூசிய உதடுகளும் 
வீச்சம் ஒழுகும்
குறிகளும் 
மலக்காடென
வழியெங்கும் சிதறிக்கிடக்கின்றன 
 
மிதித்துக்கொள்ளாமல் கடக்க 
ப்ரயத்தனங்களை
கால் கட்டைவிரல் நுனியில்
நிறுத்தி இருக்கிறேன் 
 
கூக்குரலிட்டு அழும் 
மனசாட்சி எனும் மண்ணாங்கட்டியை 
உருட்டி 
குட்டிச்சுவரில் அடித்துவிட்டுத் தொடர்கிறேன் 

மேலும்  
படகுக்குள் துள்ளும் மீனாய் 
சுவாசம் கேட்டுத் தவிக்கும்  
இருப்பு 
எந்தக் கண்ணாடியிலும் பிம்பமாக இல்லை.

பச்சை வாசனை வீசும் 
விரிந்த மரத்தின் வேர்களில் 
என் தலை சாயும் காட்சி
கால்கள் தள்ளாட 
தளர்ந்து சரியும் 
இந்நினைவில் கடைசியாய் நிற்கிறது 

Comments