Skip to main content
 
 
 
 
 
நானும் அசோகமித்திரனும்....
 
 
அழகியசிங்கர்
 
 
அசோகமித்திரனை நான் எப்போது சந்தித்தேன்.  அவரை முதலில் சந்தித்தேனா அல்லது அவரைப் பற்றி எப்போது எந்தச் சந்தர்ப்பத்தில் அறிந்துகொண்டேன்.  இந்தக் கேள்விகளுக்குமுன்னால், நான் நூல்நிலையத்தில் அதிகமாகப் புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவன்.  ஒவ்வொரு முறையும் நூல் நிலையம் போகும்போது எனக்குப் பிடித்த புத்தகங்களை எடுத்துப் படித்துக்கொண்டிருப்பேன்.  ஒருமுறை என்ன சிறுகதைத் தொகுப்பு என்பது ஞாபகம் இல்லை.  அசோகமித்திரன் என்ற பெயரில் ஒரு சிறுகதைத் தொகுதியைப் பார்த்தேன்.  மிகத் தயக்கத்துடன் எடுத்து வைத்துக்கொண்டேன்.  அத் தொகுப்பில் கதைகள் எல்லாம் சின்ன சின்ன கதைகளாக இருக்கும்போல் தோன்றியது.  அப்போது எனக்கு அறிமுகமான எழுத்தாளர்கள்.  சுஜாதா,இந்திரா பார்த்தசாரதி, கல்கி, நா.பார்த்தசாரதி, ஜெகசிற்பியன், ஜெயகாந்தன், அகிலன் போன்ற எழுத்தாளர்கள்தான்.  முதன் முதலாக அசோகமித்திரனை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.  ஆரம்பத்தில் எனக்கு ஒன்றும் புரியவில்லை.  ஆனால் வித்தியாசமாக இருப்பது போல் தோன்றியது.  ஒவ்வொரு சிறுகதையிலும் ஆரம்பமும் முடிவும் இல்லாததுபோல் தோன்றியது.  ஆனால் படிக்கத் தூண்டியது.  என் முதல்வாசிப்பிலேயே அகிலன், ந.பா எழுத்துக்களைப் படிக்க முடியவில்லை. 

 அடுத்த வாசிப்பில் இன்னும் சிலபேர்கள் விலகிவிட்டார்கள்.  ஆனால் இன்னும் சிலபேர்கள் சேர்ந்தார்கள்.  அசோகமித்திரன் தொடர்ந்து இருந்து கொண்டு வந்தார்.  அவர் பெயரைக் கண்டால் அப்புத்தகத்தை வாங்கி படிக்க ஆரம்பித்து விடுவேன்.  அசோகமித்திரன் எதை எழுதினாலும் அவர் ரசித்து எழுதுவதாக தோன்றும்.  வாசகர்களும் அந்த ரசிப்புத் தன்மையை நிச்சயமாக உணர்வார்கள்.

 அசோகமித்திரன் கணையாழியில் எழுதிக்கொண்டிருந்தார்.  அதனால் அவர் என்ன எழுதுகிறார் என்பதைப் படிக்க கணையாழியை வாங்குவேன்.  இந்த கணையாழி மூலமாக அவர் சொல்கிற பலவற்றை நான் புரிந்துகொண்டேன்.  எத்தனையோ நல்ல சினிமாக்களை அவர் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.  எத்தனையோ நல்ல புத்தகங்களை, பத்திரிகைகளை அவர் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.  அவர் சொல்கிற உத்தியும் ஒரு சிறுகதையை எழுதுவதுபோல் இருக்கும். அவர் மூலம்தான் ஐ பி ஸிங்கரை நான் தெரிந்துகொண்டேன். அவருடைய புத்தகங்களை அமெரிக்கன் லைப்பரரியில் தேடிக் கண்டுபிடித்து படிக்க ஆரம்பித்தேன்.  நான் அழகியசிங்கராக மாறுவதற்கு அது ஒரு காரணம்.

 நானும் அந்தச்சமயத்தில் கொஞ்சம் கொஞ்சம் எழுத முயற்சி செய்துகொண்டிருந்தேன்.  நான் எழுதி அனுப்பிய சிறுகதைகளை பிரபல பத்திரிகைகள் பிரசுரம் செய்யவில்லை. எல்லாம் திரும்பி திரும்பி வந்துவிடும்.  ஒருமுறை ஆனந்தவிகடனுக்கு எழுதிய கதை ஒரு வருடம் கழித்து திரும்பி வந்துவிட்டது.  வெறுத்துவிட்டேன். 

 இன்னும் பல எழுத்தாளர்களை நான் கணையாழி மூலமாகவும், அசோகமித்திரன் மூலமாகவும் தெரிந்து கொண்டேன்.  ஒரு முறை =கவனம்= என்ற பத்திரிகையைப் பற்றி ஒரு குறிப்பு கணையாழில் வந்தது. அந்தப் பத்திரிகையை வாங்குவதற்காக மாம்பலத்திலிருந்து திருவல்லிக்கேணிக்கு பஸ்ஸில் வந்து கவனம் பத்திரிகை நடத்தும் இடத்திற்கு வந்தேன்.  அது ராஜகோபாலன் என்பவரின் வீடு என்பதைத் தெரிந்துகொண்டேன்.  இப்படி ஒரு பத்திரிகை நடத்த தனி அலுவலகம் என்பது தேவையில்லை என்பதையும் தெரிந்து கொண்டேன். 

 கவனம் பத்திரிகை மூலம், ஞானக்கூத்தன், ராஜகோபாலன், ஆனந்த், ரா ஸ்ரீனிவாஸன், காளி-தாஸ், வைத்தியநாதன் முதலிய நண்பர்களைச் சந்தித்தேன்.  ஒரு சந்தர்ப்பத்தில் ஆத்மாநாமும் என் கண்ணில் பட்டார்.  சம்பத்தையும் அறிவேன். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பீச்சில் ஏதோ ஒரு சிலைக்குப் பக்கத்தில் நாங்கள் சந்தித்துக்கொள்வோம்.  ஏதோ ஒரு சிலை என்று ஏன் சொல்கிறேன் என்றால் பாரதியார் சிலைக்குப் பக்கத்தில் என்று உறுதியாக சொல்ல முடியவில்லை.

 ஆனால் அசோகமித்திரனை என்னால் மறக்க முடியாது.  அவரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் ஒரு முறை பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளை தி நகரில் நிகழ்ந்தது.  அந்தச் சந்திப்பு அவர் ஞாபகத்தில் இருக்க வாய்ப்பில்லை.

 அடுத்தமுறை அவரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் என்னுடைய குறுநாவல் ஒன்று கணையாழியில் பிரசுரம் ஆக இருந்தது.  அந்த குறுநாவலில் வங்கியில் பணிபுரிபவர் ஒருவர் கதாபாத்திரமாக வந்திருப்பார்.  நானும் வங்கியில் பணிபுரிவதால் யாராவது படித்து பிரச்சினை ஆகிவிடுமோ என்று நினைத்துப் பயந்து அசோகமித்திரன் வசிக்கும் தி நகர் வீட்டிற்கு சென்றேன்.  நான் அவரைப் பார்த்த சமயம் அவருக்கு உடம்பு சரியில்லை.  படுத்துக்கொண்டிருந்தார்.  என்னைப் பார்த்தவுடன் நான் அவரிடம் =வங்கியில் பணிபுரிபவர்+ என்பதை நீக்கி விடலாமா என்று கேட்டேன்.  அவர் அதெல்லாம் மாற்ற வேண்டாம்.  ஒரு பிரச்சினையும் வராது என்று கூறிவிட்டார். 

 மேலும் அவர் என் குடும்பத்தைப் பற்றியும், என்னைப் பற்றியும் விஜாரித்தார்.  அசோகமித்திரன் அவரைப் பார்த்துப் பேச வருபவர்களிடம் அக்கறை உள்ளவர்.  கல்லூரிப் படிக்கும் மாணவர்கள் யாராவது கதை எழுதுபவர்களாக இருந்தால் படிப்பை முடித்துவிட்டு எழுதுங்கள் என்று கூறக்கூடியவர்..  அதேபோல் வேலை தேடிக்கொண்டிருப்பவர் கதை எதாவது எழுதினால் முதலில் வேலையைத் தேடுங்கள் எழுதுவது அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லக் கூடியவர்.  அதே சமயத்தில் போரடிக்கும்படி அவரிடம் பேசிக்கொண்டிருந்தால், பேச வந்தவரின் மனம் கோணாதபடி அனுப்பி விடுவார்.

 அசோகமித்திரன் ஒரு எளிமையான மனிதர்.  அவர் எழுத்தில் காணப்படும் எளிமை அவர் பேச்சிலும் காணப்படும். நகுலன் எழுத்தில் தூக்குதலாக தெரியும் தன் உணர்வுத் தன்மை அசோகமித்திரனிடம் இருக்காது.  அதேபோல் மிகை உணர்ச்சித் தன்மையும் அவர் எழுத்தில் காணப்படாது.  ஒரு தினசரி பத்திரிகையை எடுத்துப் படிப்பதுபோல அவர் எழுத்து சரளமாகப் போய்க் கொண்டிருக்கும்.  ஆனால் அந்த எழுத்தில் ஒரு ஆழம் இருக்கும். 

 முதலில் நவீன விருட்சத்திற்கு எதாவது எழுதித் தருவாரா என்ற சந்தேகம் இருந்தது.  அவரிடம் தயங்கி தயங்கி கேட்டுக்கொண்டபோது அவர் தொடர்ந்து எழுதிக் கொடுக்க ஆரம்பித்தார்..  கேட்ட ஒரு வாரத்தில் எல்லாம்  எழுதி அனுப்பி விடுவார்.  ஆனால் என் பத்திரிகையைக் கொண்டுவர நான் இன்னும் பல நாட்கள் எடுத்துக்கொள்வேன்.  இரண்டு பக்கங்களுக்கு மேல் அவர் எழுதித் தரமாட்டார்.  சரியாக அளவு எடுத்து அனுப்புவதுபோல் அவர் கட்டுரை அமைந்திருக்கும். 
  


  (நவீன விருட்சம் சார்பாக 22.09.2012 அன்று நடந்த அசோகமித்திரன் 82 என்ற கூட்டத்தில் பேசிய கட்டுரை.  கூட்டம் 200க்கும் மேல் கூடியுள்ள கூட்டம்.  சிறப்பாக நடந்தது. )

Comments