Skip to main content

எதையாவது சொல்லட்டுமா.........71



காலையில் அப்பா என்னைப் பார்த்துச் சொன்னார். 

ஒரே மயக்கமாக இருக்கிறதுடா?

நான்  கேட்டேன். 

''எப்போது?''

''எப்போதும்தான்.''

''டாக்டர்கிட்டே போகலையா?''

''போனேன். 
அவன் சொல்லிட்டான்.  இனிமேல் மருந்தெல்லாம் வேண்டாமாம்.''

அப்பாவிற்கு 90 வயது.  நினைச்சே பார்க்க முடியாத வயது.

எனக்கு 59.  பயங்கர தடுமாற்றம்.  சென்னைக்கு வந்தபிறகு சென்னையே புரியவில்லை.  மாம்பலத்திலிருந்துத திருவல்லிக்கேணிவரை டூவீலரில்தான் போக முடிகிறது.  வரும்போது, பயங்கர கூட்டம்.  வண்டியில்
பறக்க முடியாது.  நடந்துதான் போகமுடியும். 

நான் வந்தவுடன், தினமும் எனக்குப் பிடித்த நடேசன் பூங்காவில் நடக்க ஆரம்பித்தேன்.  வேகம்.  சர்க்கரை அளவைக் குறைக்க வேண்டும் என்று.  காலையில் 7.45க்கு ஒரு லைட்டா டிபன் சாப்பிட்டு மதியம் சாப்பாடு எடுத்துக்கொண்டு போவேன்.  மதியம் 2 மணிக்குத்தான் சாப்பிடுவேன்.  அதற்கு முன் குறைந்தது 3 காப்பிகளை விழுங்குவேன்.  மாலை வீடு திரும்பும்போது ஒரு மாதிரியாகிவிடும்.  பேசாமல் சீர்காழிக்கே போய்விடலாமா என்று தோன்றும்.

அதேபோல் நான் அடிக்கடி சந்தித்த நண்பர்களை சென்னையில் பார்க்க முடியவில்லை.  காரணம் நேரம் இன்மை.  சச்சிதானந்தம் சி சு செல்லப்பா ந.பிச்சமூர்த்தியைப் பற்றி பேசினார். கொஞ்ச நேரம் கேட்டுவிட்டு அலுவலகம் ஓடிவிட்டேன்.  எங்கள் கிளையில் லாக்கர் பாதாளத்தில் இருக்கிறது.  குறைந்தது ஐந்தாறு தடவைகள் நடக்க வேண்டிவரும்.  கால் வலிக்கும்.  யே காலே வலிக்காதே என்பேன்.  முதலில் தூக்கம் சரியாக வராமலிருந்தது.  எனக்கு தூக்கம் வராமலிருக்கிற பைத்தியம்.  அப்பா தூங்குவதைப் பார்த்தால் பயமாக இருக்கும். 

அப்பாவிற்கு சந்தோஷம் இங்கு நான் வந்தது. 

 ''நான் ஐந்துமுறை லட்டர் போட்டேன்.  உங்கள் ஜீஎம்மிற்கு.''

''இனிமே யாருக்கும் லட்டர் போடாதப்பா,'' என்றேன்

Comments

நீங்கள் சொல்லும் விதமே ஒரு கதை போல் இருக்கிறது...
ஹ ர ணி said…
அன்புள்ள...

எதையாவது சொல்லட்டுமா என்று சொல்லிவிட்டு சுவையாகவும் வாழ்வியல் அர்த்தமுடனும் சொல்கிறீர்கள்.. நன்றாக இருக்கிறது. இப்படிச்சொல்வதில் ஒரு படைப்பாளிக்கு நிறைய இடைவெளிகளும் சுதந்திரங்களும் உண்டு. சொல்லுங்கள். கேட்கத் தயாராக இருக்கிறோம்.
ஹ ர ணி said…
அன்புள்ள

எதையாவது சொல்லட்டுமா என்று சொல்லிவிட்டு சுவையாகவும் வாழ்வியல் அர்த்தமுடனும் சொல்கிறீர்கள். நன்றாக உள்ளது. இப்படிச் சொல்வதில் படைப்பாளிக்கு நிறைய இடைவெளிகளும் சுதந்திரங்களும். சொல்லுங்கள். கேட்கக் காத்திருக்கிறோம்.