Skip to main content

பின்எப்போதும்

எண்ணத்திற்கும்
செயலுக்கும்
இடைப்பட்ட தருணத்தில்
வாழ்ந்து கொண்டிருந்தேன்
கண்ணீர் நதியில்
அலுப்பு தீர
குளித்துக் கொண்டிருந்தேன்
மயானத்தில்
சடலம் எரிவதை
பார்த்துக் கொண்டிருந்தேன்
மொட்டுக்கள்
இதழ் விரிப்பதை
ரசித்துக் கொண்டிருந்தேன்
வானம்பாடி
கானம் பாடுவதை
கேட்டுக் கொண்டிருந்தேன்
அதிசயமாக
பெய்த மழையில்
தொப்பலாக
நனைந்து கொண்டிருந்தேன்
கூண்டில் அடைத்து
பறவையின் சுதந்திரத்தை
பறித்தவர் மீது
கோபம் கொண்டிருந்தேன்
அலையோசையில்
மெய்மறந்து
தன்னிலையை
இழந்து கொண்டிருந்தேன்
வெளி மட்டுமே
நிலையானது என
எண்ணிக்கொண்டே
வானத்தில் சிறகின்றி
பறந்து கொண்டிருந்தேன்.

Comments