Skip to main content

எது கவிதை........2

ஓய்வுபெற்ற என் அலுவலக மேலதிகாரி ஒருவர் தமிழில் புலமை வாய்ந்தவர். சரளமாக இலக்கணத்துடன் கவிதை எழுதுபவர். ரொம்ப கஷ்டமான அரவிந்தரின் Perseus the Deliverer என்ற நாடகத்தை தமிழில் கவிதை வடிவமாக 286 பக்கங்கள் புத்தகமாகக் கொண்டு வந்துள்ளார். கவிதையாக அந் நாடகம் தமிழில் வெளிவந்துள்ளது. அப்புத்தகத்தைப் பார்க்கும்போது எனக்கு திகைப்பாக இருந்தது. பின் அப்புத்தகத்தைப் படிக்கும்படி கேட்டபோது எனக்குப் பிரச்சினையாகப் போய்விட்டது. எனக்கு நேரம் கிடைக்கவில்லை என்பது ஒரு பக்கம். அதை என்னால் படிக்க முடியவில்லை என்பது சங்கடமாகப் போய்விட்டது. அப்புத்தகத்தை என்னால் படிக்கவே முடியவில்லை. ஏன்?

கவிதையின் புது வடிவம் பிறந்தபிறகு பழைய மரபெல்லாம் போய்விட்டது. ஆனால் இன்னும் பலபேர் பழைய மரபிலேயே கவிதை எழுதிக்கொண்டு போகிறார்கள். அமுதசுரபி என்ற பத்திரிகையில் இன்னும் வெண்பா போட்டி நடந்து கொண்டிருக்கிறது. இதுமாதிரியான கவிதைகளில் பெரும்பாலும் அதை அமைக்கும் முறையைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதால் சாராம்சம் போய்விடும். பின் நீண்ட கவிதை.
என்னால் நீண்ட கவிதைகளைப் படிக்கவே முடியவில்லை. கவிதையை நாடகமாக எழுதிப் படிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

கவிதை என்பது ஒரு பக்கத்தில் நின்று விடவேண்டும். அதன் பின்னும் அதை நீட்டினால், கொஞ்சம் நீர்த்துப்போகக்கூடிய வாய்ப்புண்டு. நகுலனின் நீண்ட கவிதைகள் இரண்டை நான் விருட்சம் வெளியீடாகக் கொண்டு வந்துள்ளேன். ஆனால் முழுவதும் ரசித்துப் படிக்க முடியுமா என்பது தெரியவில்லை. கவிதையை அதிகப் பக்கங்கள் கொண்டு வந்தால், படிக்க தடுமாறும் இது என் அனுபவம். பலருடைய நீண்ட கவிதைகளை நான் படிப்பதில்லை. எங்காவது சில வரிகள். பாராக்கள் படிப்பதுண்டு. மனோன்மணியம், சிலப்பதிகாரம் கூட படித்ததில்லை. படிக்க விரும்பியதில்லை. ஏன்என்றால் அந்த அளவிற்கு பொறுமை இருந்ததில்லை. அதேபோல் ஹைகூ கவிதைகளைப் படிக்க விரும்பியதில்லை. கவிதை என்றால் கொஞ்சமாவது 6 வரிகளாவது வரவேண்டும்.

இந்த என் அனுபவத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதில்லை.

(இன்னும் வரும்)

Comments

Jayaprakashvel said…
உங்களின் கருத்தை நானும் ஏற்கிறேன். என்னாலும் நீண்ட கவிதைகளை படிக்க முடிந்ததில்லை. ஆனால் நான் கொஞ்ச நாட்களாக ஐந்தாறு வரிகளில் சில கவிதைகளை எழுதி வருகிறேன்.