Skip to main content

நான், பிரமிள், விசிறி சாமியார்....15




நான் இந்தத் தொடரை ஆரம்பித்து பல மாதங்கள் ஓடிவிட்டன. ஆனால் தொடர்ந்து இதை எழுதி முடிக்க முடியவில்லை. பிரமிள் பற்றி பல விஷயங்கள் யோசித்து யோசித்து எழுத வேண்டி உள்ளது. எதுவும் ஒரு ஒழுங்கில்லாமல் இந்தத் தொடர் போய்க் கொண்டிருக்கிறது. எழுத்தாளர் பலருக்கு பிரமிளைப் பிடிக்கவில்லை. அது ஏன் என்று நான் ஆராய்ந்து பார்ப்பேன். பல மூத்த எழுத்தாளர்கள் அவருடன் ஒரு காலத்தில் நெருங்கி பழகியிருக்கிறார்கள். பின் அவரை விட்டு விலகி ஓடியும் இருக்கிறார்கள். அப்போதெல்லாம் பிரமிள் பற்றி அவர்கள் மூலமாகவும், அவர்களைப் பற்றி பிரமிள் மூலமாகவும் கேட்டுக் கொண்டிருப்பேன்.

அவர்கள் பிரமிள் பற்றி பேசும்போதே கசப்புணர்வுடன் பேசுவார்கள். பிரமிள் இலங்கைக்காரரா தமிழ்நாட்டைச் சார்ந்தவரா? இந்தக் குழப்பமும் எல்லோருடனும் இருக்கும். ஆனால் இலங்கையில் தன் குடும்பத்தை விட்டு வந்தவர். பின் அங்கு செல்லவே இல்லை. தனி மனிதனாகவே தமிழ் நாட்டில் தங்கி விட்டார். கடைசிவரையில் அவர் தனிமனிதர். முரண்பாடு மிக்க மனிதர். எனக்கு அவர் வாழ்வதை நினைத்து ஆச்சரியமாக இருக்கும். அவர் யாரிடமும் அடிமையாய் போய் பணம் சம்பாதிக்கவே இல்லை. கொஞ்சம் இணங்கினால் போதும், அவரால் ஓரளவு பணம் சம்பாதிக்க முடியும். ஆனால் அவரால் முடியாது. அதேபோல் வறுமையை அவர் சந்தித்ததைப் போல் யாரும் சந்தித்திருக்க மாட்டார்கள். ஆனால் இதைப் பற்றியெல்லாம் அவர் பேச மாட்டார். வறுமையைப் பற்றி அவர் கவிதை எழுதியும் இருக்கிறார். அது தனி மனிதனின் வறுமையைப் பற்றி அல்ல.

அரும்பு பத்திரிகை ஆசிரியர் அவர் அன்புக்குரியவர். அவர் சொல்லி அரும்பு பத்திரிகையில் அவர் எழுதினார். ஆனால் கொஞ்ச காலம்தான் அது நீடித்தது. எல்லாவற்றிலும் ஒருவித முரண்பாடு மிக்க மனிதராகவே இருந்து வந்தார்.

அவர் கடைசிக் காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அவர் வசித்த வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த பெண்மணி கூறியதைக் கேட்டு எனக்குத் திகைப்பாக இருந்தது. பிரமிள் நுங்கம்பாக்கத்தில் ஓரிடத்தில் குடியிருந்தார். அந்த இடத்தின் பக்கத்திலேயே பன்றி மாமிசம் விற்கும் இடம். பன்றியை வெட்டிப் போடும்போது ஏற்படும் ஒரு வித துர்நாற்றம் சூழ்ந்தபடியே இருக்கும். பிரமிள் மட்டும் அங்கு இல்லை. இன்னும் நாலைந்து குடித்தனங்களும் அங்கு இருந்தன. மற்ற குடித்தனங்களில் இருந்தவர்கள் பிரமிளை பெரியவர் என்று குறிப்பிடுவார்கள்.

ஒருமுறை பிரமிள் தன் வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள பெண்மணியிடம் ஒருநாள் மின்சார பில்லை கட்ட கார்டும், பணமும் கொடுத்துவிட்டு சென்று விட்டார். அந்தப் பெண்மணி அவர் கேட்டுக்கொண்டபடி பணம் கட்டிவிட்டார். பிரமிள் திரும்பவும் அந்தக் கார்டைப் பார்த்து பணம் கட்டுவதில் ஏதோ வித்தியாசம் இருப்பதாக நினைத்து அந்தப் பெண்மணியைத் திட்டிவிட்டார். பிரமிள் திட்டியதைக் கேட்டு அந்தப் பெண்மணி அழுது விட்டார். உண்மையில் தவறு பிரமிள் மீதுதான் என்பதை பிரமிள் உணர்ந்து விட்டார்.

இந்தத் தவறை உணர்ந்தவுடன், சாதாரணமானவர்கள் அதை வேறு விதமாக எடுத்துச் சென்றிருப்பார்கள். ஆனால் பிரமிள் செய்த காரியம் அந்தப் பெண்மணியை மேலும் மிரள வைத்துவிட்டது. பிரமிள் அந்தப் பெண்மணியைப் பார்த்து, அந்தப் பெண்மணியின் காலில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டார். அவருடைய இந்தச் செய்கை அந்தப் பெண்மணியை மிரள வைத்துவிட்டது. இதுதான் பிரமிள். அவருடைய அதீத தன்மையை நான் இப்போது கூட பலரிடம் பார்ப்பதுண்டு. பிரமிள் அறையில் பக்கவாத நோயுடன் அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது, யாரும் அவருடைய அறைக்கு பல மணிநேரங்கள் செல்லவில்லை.
(இன்னும் வரும்)

Comments