Skip to main content

கடவுள் ஆடிடும் ஆட்டம்

கடவுளுக்கு முன்னதான
ஜாதகக் கட்டங்களில்
இடையறாது சுழலும்
சோழிகள் திரும்பி விழுகின்றன

சதுரங்க ஆட்டங்களில்
சிப்பாய்களை இழந்த ராஜாக்கள்
பயந்திருக்கின்றனர்
ராணிகள் அருகில்.

வண்ணம் மாறிவிழும் சீட்டுக்கள்
கோமாளியாக்கிக் கொண்டிருக்கிறது
பிரித்தாடும் கடவுளை.

மனிதர்களின் ஆட்டத்தின்
சூட்சுமங்கள் புரியாது
தெறித்தோடுகிறார்
மனிதர்களுடனாடும் கடவுள்.

o

ஒரு விளையாட்டின் இடைவேளையில்
தேநீர் அருந்தும் கடவுளை
கடவுளைச் சந்தித்தேன்.

இருவருக்கும் பேசுவதற்கு ஒன்றுமில்லை
புன்னகைத்தோம்
பிரிந்தோம்.

அவர் சொல்லாத உண்மைகளும்
நான் கேட்காத கேள்விகளும்
ஒன்றுடன் ஒன்று பேசிக்கொண்டிருந்தன பின்பு.

o

மரணத்தறுவாயில் என்னை வரச் சொல்லியிருந்தார்
கடவுள்

ரகசியம் எதாவது உடைக்கப்படலாம்
என்றோ

காதல் எதாவது சொல்லப்படலாம்
என்றோ

புலம்பல்கள் சேரலாம்
என்றோ

நினைத்திருந்தேன்.

நான் போய் சேருவதற்குள்
கடவுள் போய்சேர்ந்திருந்தார்.

o

கடவுள் பொம்மைகளை வைத்து
விளையாடிய குழந்தைகளை
பழிவாங்குவார்
பிறிதொருநாள்.



Comments