Skip to main content

தொலைவானில் சஞ்சரிக்கும் ஒற்றைப் பறவை


வளைதலும்

வளைந்து கொடுத்தலுமான

நாணல்களின் துயர்களை

நதிகள் ஒருபோதும்

கண்டுகொள்வதில்லை

கூடு திரும்பும் ஆவல்

தன் காலூன்றிப் பறந்த

மலையளவு மிகைத்திருக்கிறது

நாடோடிப் பறவைக்கு

அது நதி நீரை நோக்கும் கணம்

காண நேரிடலாம்

நாணல்களின் துயரையும்

சிறகடித்து அவற்றைத் தடவிக்கொடுத்து

தான் கண்டுவந்த

இரயில்பாதையோர நாணல்களின் துயர்

இதைவிட அதிகமென

அது சொல்லும் ஆறுதல்களை

நாணல்களோடு நதியும் கேட்கும்

பின் வழமைபோலவே

சலசலத்தோடும்

எல்லாத்துயர்களையும்

சேகரித்த பறவை

தன் துயரிறக்கிவர

தொலைவானம் ஏகும்

அப்படியே தன் கூடிருந்த மரத்தினையும்

கண்டுவரக் கூடும்

-

Comments