Skip to main content

நான்,பிரமிள்,விசிறி சாமியார்.......8








பிரமிள் இதற்கு பிறகு பலதடவைகள் விசிறி சாமியாரைப் போய்ப் பார்த்தார். ஆனால் நான் அதன்பின் பார்க்கவில்லை. பாலகுமாரன் மூலம் விசிறி சாமியார் புகழ் எங்கும் பரவி விட்டது. தனியாக அவர் ஆஸ்ரமம் வைத்துக்கொண்டு போனபின், அவரைச் சுற்றிலும் கூட்டம். அக் கூட்டத்தில் அவரை நெருக்கமாக பார்த்துப் பேச வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தோடு நான் அந்த ஆஸ்ரமத்திற்குப் போயிருக்கிறேன். ஆனால் விசிறி சாமியாரைப் பார்க்கக் கூட முடியவில்லை.

என் மூட் மாறிவிட்டதை பிரமிள் நன்றாக அறிந்திருந்தார். அடுத்தநாள் பிரமிளிடம், இன்னொரு முறை விசிறி சாமியாரைப் போய்ப் பார்க்கலாமா என்று கேட்டேன். இன்னொரு முறை நம்மைப் பார்க்க விரும்ப மாட்டார் என்றார் பிரமிள். பின் நாங்கள் மூவரும் திருவண்ணாமலையைச் சுற்றி வந்தோம். தவம் புரியும் குகை போன்ற இடங்களைப் பார்த்தோம்.

விசிறி சாமியாரிடமிருந்து விடைபெற்று வரும்போது, எஙகள் மூவருக்கும் விசிறி சாமியார் கி.வா.ஜா அவர்கள் விசிறி சாமியார் பற்றி எழுதிய கவிதைகள் அடங்கிய நூலைக் கொடுத்தார்.

நானும் பிரமிளும் சென்னை திரும்பும்போது, என் மனதில் சாமியார் என்றால் யார்? அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்றெல்லாம் தோன்றியவண்ணம் இருந்தன. சாமியாரெல்லாம் குழந்தை மாதிரி, அவர்கள் மனதில் என்ன தோன்றுகிறது என்பதை அறிய முடியாது என்று பிரமிள் குறிப்பிட்டார். நீங்கள் பெரிதாக இதைப் பற்றி நினைக்காதீர்கள் என்றும் குறிப்பிட்டார். சாமியார் பிரமிள் கையை சிறிது நேரம் பிடித்துக்கொண்டிருந்தபோது, அந்த ஸ்பரிசம் ரொம்ப குளிர்ச்சியாக இருந்தது என்று குறிப்பிட்டார். ஒரு ஆரோக்கியமான பெண்ணின் கையைத் தொடும்போது அப்படித்தான் குளிர்ச்சியாக இருக்கும் என்றும் பிரமிள் குறிப்பிட்டார். அவர் சொன்னதைக் கேட்டு எனக்குத் திகைப்பாக இருந்தது. பிரமிள் திருமணமே செய்து கொள்ளாதவர். அவருக்கு குடும்பமே கிடையாது. ஆரோக்கியமான பெண்ணின் கை எப்படி குளிர்ச்சியாக இருக்கும் என்பது அவருக்கு எப்படித் தெரியும். பிரமிளைப் பார்த்து இந்தக் கேள்வியை கேட்கவே இல்லை. மரியாதை நிமித்தமாக இதைக் கேட்கவில்லை.
(இன்னும் வரும்)

Comments

konjsm periya paththiya ezhuthalaam

kaaththirukkireen
இந்த தொடர் அருமையாக வருகிறது.
குறிப்பாக பிரமிள் அவர்கள் பற்றி பல அறிந்திராத தகவல்கள் ஆர்வத்தை தூண்டுகிறது.