Skip to main content

என் அம்மா


அவளுக்கு நன்றகவே தெரியும்
மகாபாரதமும் இராமயணமும்-
தினமும் எங்களுக்கு ஏதாவது ஒரு கதை
சொல்லுவாள் அவற்றிலிருந்து
தினமும் ஒரு புதிய கதை உண்டு -

அவற்றில் ஆயிரக்கணக்கில்
கதைகள் உண்டல்லவா?
எப்போதும் அவளுக்கு அவைதான்..
படித்துக்கொண்டிருப்பாள்-
பிரார்த்தனையின்போதும் அவைதான்
சில பகுதிகள் சில காண்டங்களிலிருந்து நிதமும்
ஒரு மண்டலம் ஒரு குறிப்பிட்ட பலனைத்தருமென்று.
நாங்களெல்லாம் பிரசாதத்திற்கெனவே காத்திருப்போம்
அதுவுமல்லவா என்ன எப்படிச் செய்ய
என்று சொல்லப்பட்டுள்ளது....

சீதை மற்றும் இலவகுசர்களின் கட்டங்கள்
அவளுக்குத் தெரிந்திருந்தும்
அவற்றைச் சொல்லும் போது
கண்ணில் நீர் வந்தபோதும்-
இராமனின் மேல்.
சீதையின் மேல் சந்தேகித்து
அக்னிப்பிரவேசம் செய்யவைத்த
இராமனின் மேல்
அவளுக்கு கோபம் வந்ததாக
எங்களுக்குத் தெரிந்ததில்லை-

அந்த வயதில்
நாங்கள் கேட்டதுமில்லை
அது அவளுக்கும் பிடித்திருக்குமாவென்றும்
எங்களுக்குத் தெரியாது..

எங்களுக்குத் தெரிந்ததெல்லாம்
அது பற்றிப் பெரியதாக விவாதித்தவர்களை
அவளுக்குப் பிடித்ததில்லை என்பதே-
அது.
ஒரு மாதிரியான,
பிணம்தின்னிக்கொள்ளிகளைப் பற்றி
நினைக்கையில் வருமே
அது போன்றவொரு
அருவருப்பு....

நான் வயதுக்கு வந்தபின்னர்
ஒருநாள்
அம்மா சொன்னாள்
ஏ அது அப்படித்தான்

பாஞ்ஞாலியை வைத்து
விளையாடியது
இதே கணக்கு தானே?

மற்றதெல்லாம் வெறும் கண்ணாமூச்சி
குழந்தைக்கு நிலா காட்டுவது-
ஒவ்வொரு அம்மாவும்
ஆங்கிலத்தில் சொல்வது போல
சர்ரகேட் மதர் ஒன்லி
(Surrogate mother only)
அவளது கர்ப்பப்பை வாடகை ஊர்தி மட்டுமே
வரும் கிராக்கி
அவளது கணவனேயானாலும் ...ஏ

சரி,
புரியவேயில்லை...
ஆனாலும்
மகாபாரதமும் இராமாயணமும்
ஏன் கடைசிவரை
படித்துக்கொண்டேயிருந்தாளென்று.

நவீன விருட்சம் இதழில் சமீபத்தில் வெளிவந்த எ தியாகராஜனின் இன்னொரு கவிதை இது. மிக எளிமையாக எழுதப்பட்ட கவிதை. பொதுவாக ஒரு தொகுப்பை முழுவதுமாக வாசிப்பதைவிட பலருடைய கவிதைகள் அடங்கிய தொகுப்பை வாசிப்பது சிறந்த அனுபவத்தைத் தரும். ஒருவருடைய தொகுப்பபு மட்டுமே நிரம்பிய கவிதைகள் ஒரே விதமாகவும் படிக்க அலுப்பை உண்டாக்குவதாகவும் இருக்கும். எந்தக் கொம்பன் எழுதினாலும் இதுதான் உண்மை நிலை. யாருடைய கவிதை நூல்களாக இருந்தாலும், படிக்க படிக்க ஒரே வித mind process ஐப் படித்து படித்து நமக்குப் போர் அடித்துப் போய்விடும். என் சகோதரனுக்கு ஜே கிருஷ்ணமூர்த்தியின் Education and its significance என்ற புத்தகத்தைப் படிக்கக் கொடுத்தேன். படித்துவிட்டு கிருஷ்ணமூர்த்தியைப் படிக்க இந்த ஒரு புத்தகமே போதும் என்று கூறிவிட்டு அவருடைய வேறு எந்தப் புத்தகத்தையும் படிக்காமல் இருந்துவிட்டான். கவிதையிலும் ஓரளவு சிறுகதைகளிலும் ஒரே மாதிரியான mind process போரடிக்கிறது. படிக்கிறவர்களுக்கு இது ஏற்படாமல் இருப்பதில்லை. அதனால் ஒருவரின் தனிப்பட்ட தொகுதியைவிட பலர் எழுதிய தொகுதி சிறப்பாக இருக்கிறது.

விருட்சம் முழுவதும் பலருடைய கவிதைகள் படைக்கப் பட்டிருப்பதால், வேறு வேறு அலைவரிசையை உண்டாக்குகிறது.

அழகியசிங்கர்
15.07.2008 (செவ்வாய்க்கிழமை)

Comments